சென்னை: சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கூடுதலாக ஏசி பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கையினை போக்குவரத்துத்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சென்னையில் சுமார் 3,400 எம்டிசி பஸ்கள், மாவட்டங்களில் 6,600 டவுன் பஸ்கள், 7800 நகரப்பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல் விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் உள்மாநிலத்திற்குள் 600 பஸ்களும், வெளி மாநிலங்களுக்கு 460 பஸ்களும் என மொத்தமாக 19,400க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 600 ஏசி பஸ்களும் அடங்கும். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சேவை தொடங்கியது. ஆனால் ஏசி பஸ் பஸ்கள் மட்டும் இயங்கப்படவில்லை. எனவே ஏசி பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த மாதம் முதல் ஏசி பஸ்களின் சேவையை தொடங்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. அதன்படி சேவை தொடங்கியது. மொத்தம் உள்ள 600 பஸ்களில் 250க்கும் மேற்பட்ட பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. தமிழகத்தில் கோடை நெருங்கவுள்ள நிலையில் தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாகவுள்ளது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 90.5 டிகிரி; மீனம்பாக்கம்- 91.76 டிகிரி, வேலூர்-95.72 டிகிரி, ஈரோடு-100.4 டிகிரி, தர்மபுரி-96.8 டிகிரி; சேலம்-99.68 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை நிலவி வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருகிறது. இதன் தாக்கம் இரவிலும் நீடிக்கிறது. எனவே பெரும்பாலானோர் பயணங்களின்போது ஏசி பஸ்களை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக நீண்ட தூரம் மேற்கொள்வோரில் பலர் ஏசி பஸ்களிலேயே பயணிக்கின்றனர். இதனால் ஏசி பஸ்களின் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து தற்போது இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை உயர்த்தி 400 ஏசி பஸ்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்குவதற்கும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்….