சென்னை: சென்னையில் மூடப்பட்ட பகுதிகளில் கடையை திறக்க அனுமதி கோரி, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடியிடம், வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், நேற்று 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ஐந்து பேரை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அழைத்து பேசினார். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: மாநகராட்சி கமிஷனரிடம் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. கடைகள் மூடப்பட்டிருந்தாலும் அப்பகுதியில் மக்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது. எனவே, கடைகளை திறக்க அனுமதி கோரி மனு அளித்தோம். எங்களிடம் பேசிய கமிஷனர், ‘‘சென்னையில் இதற்கு முன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும், மார்க்கெட் பகுதிக்கு சென்று வந்தவர்களாக உள்ளனர். எனவே, மக்களின் நலன் கருதியே இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது. 10 இடங்கள் மூடப்படுவதற்கு முன் தினசரி 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன் தொற்றும் அதிகரித்து வந்தது. தற்போது, தொற்று எண்ணிக்கை 200க்கு கீழ் குறைந்து, நல்ல பலனை அளித்துள்ளது. எனினும், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அதற்கு மாற்று நடவடிக்கை குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் பேசி ஆலோசித்து நல்ல முடிவை அறிவிக்கிறேன்’’ என, நம்பிக்கை அளித்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்….