மீனம்பாக்கம்: செனனையில் பெய்த திடீர் மழையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் விமான பயணிகள், விமானிகள், ஊழியர்கள் தாமதமாக விமான நிலையத்துக்கு வந்ததால் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 7 சர்வதேச விமானங்கள் உட்பட 20 விமானங்கள் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பெய்த பெருமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்துக்கு வந்த பல பயணிகள் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கி கொண்டனர். குறித்த நேரத்திற்கு அவர்களால் செல்ல முடியவில்லை. பயணிகள் மட்டுமின்றி, விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், விமான பணிப்பெண்கள், விமான பொறியாளர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப வல்லுனர்களும் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கிக்கொண்டனர்.இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. நேற்றிரவு 7 மணியில் இருந்து இன்று அதிகாலை 1.30 மணி வரை 20 விமானங்கள் சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னையில் இருந்து இலங்கை செல்லும் 4 விமானங்கள், துபாய், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய 7 சர்வதேச விமானங்களும், டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், புவனேஸ்வர், கோவை உள்ளிட்ட 13 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. ஆனால் சென்னைக்கு வரவேண்டிய விமானங்களில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல் இயங்கின….