பவானி,செப்.27: அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சென்னம்பட்டி,கொமராயனூர், வெள்ளித்திருப்பூர், மாத்தூர் மற்றும் புதூர் ஊராட்சி பகுதிகளில் வசிக்கின்ற ஏழை,எளிய மக்கள் ரூ.5 லட்சம் வரையில் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறும் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யாமல்,அட்டை பெறாமலும் இருந்தனர். இவர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று பதிவு செய்ய ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முகாம் சென்னம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
இம்முகாமை, எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடக்கி வைத்து, விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டார். இங்கு, விண்ணப்பித்தவர்களுக்கு பதிவு எண் உடனடியாக வழங்கப்பட்டது.பின்னர், காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. காப்பீட்டுத் திட்ட தொடர்பு அதிகாரிகள் செல்வன், விஜய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.