பாடாலூர், ஜூன்12: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் – ஆலத்தூர்கேட் சாலையில் பட்டுப்போய் பல மாதங்களாகியும் அப்படியே உள்ள புளிய மரம் சாலையில் செல்வோர் மீது விழுந்து உயிர் பலி வாங்குவதற்கு முன் அகற்றவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துளளனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் புகழ்பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில்களுக்கு ஆலத்தூர் கேட்- செட்டிகுளம் சாலைகளில் தான் செல்ல வேண்டும்.
இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகளும் சென்று வருகின்றன. இந்த சாலைகளில் இருபுறமும் புளியமரங்கள் உள்ளது. இந்த புளியமரத்தில் ஒரு புளியமரம் பட்டுபோன நிலையில் பல மாதங்களாகியும் அப்படியே உள்ளது. இதில் பட்டுப்போன புளியமரம், காற்று வேகமாக வீசும் சூழ்நிலையில் சாலை யில் செல்வோர் மீது விழுந்தால் உயிர்பலி ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே உயிர் பலி ஏற்படும் முன் அந்த பட்டுப்போன மரத்தை அந்த இடத்திலிருந்து அகற்றி உயிர் பலி ஏற்படுவதை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் இது போன்று சாலையோரமுள்ள பட்டுப்போன புளிய மரங்களை அகற்றி விட்டு புதிதாக மரக்கன்றுகள் நடவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.