செஞ்சியில் பரபரப்பு நடுரோட்டில் பிளேடால் கழுத்தை அறுத்து காய்கறி வியாபாரி தற்கொலை முயற்சி

செஞ்சி : செஞ்சியில் குடும்ப பிரச்னை காரணமாக நடுரோட்டில் காய்கறி வியாபாரி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (35). தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி குப்பம்மாள். இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து குப்பம்மாள் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 5ம்தேதி புகார் கொடுத்தார். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி கணவன், மனைவியை அழைத்து அறிவுரை கூறி சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளார். இந்நிலையில் நடராஜ் தாக்கியதாக குப்பம்மாள் நேற்று மீண்டும் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் மீண்டும் இருவரையும் அழைத்து பேசினர். அப்போது போலீசார் நடராஜை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நடராஜ், செஞ்சி நான்குமுனை சந்திப்பில் நின்று கொண்டு பிளேடால் தன்னைத் தானே கழுத்தில் பல இடங்களில் அறுத்துக் கொண்டார். இதனால் அவரது ரத்தம் பீறிட்டு வெளியேறியது. நடுரோட்டில் நடந்த இச்சம்பவத்தை கண்டு மக்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து வந்த செஞ்சி போலீசார் நடராஜை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தற்கொலை செய்து கொள்ள முயன்ற நடராஜிக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக மக்கள் நடமாட்டம் மிகுந்த நடுரோட்டில் காய்கறி வியாபாரி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் செஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

ஆம்பூரில் மேம்பால பணியின்போது சாரம் சரிந்து விபத்து

மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உடனே நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்