Thursday, October 3, 2024
Home » செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கோடைவெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்: கலெக்டர் வலியுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கோடைவெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்: கலெக்டர் வலியுறுத்தல்

by Karthik Yash

 

செங்கல்பட்டு, ஏப்.27: செங்கல்பட்டு மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள, உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறு குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும்.

மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும். மழலைப்பள்ளிகளை கோடை காலம் முடியும் வரை செயல்படுத்த வேண்டாம். குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்ல கூடாது. தனியே வசிக்கும் முதியவர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முதியவர்களின் அருகில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

100 நாட்கள் பணியின்போது மதியம் 12 மணிக்குமேல் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளுக்கு நிழல் தரும் கூரை அடியில் கட்டவும், போதிய வசதி செய்து கொடுக்கவும். போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். தீவனங்களை வெட்ட வெளியில் போடவேண்டும். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட கூடாது. பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகளை வாகனங்களில் அடைத்து வைக்க வேண்டாம்.பருவநிலை மாற்றங்களினால் இந்தாண்டு கோடை வெயில் துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் வயர்கள் உருகி, அதில் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

மாடி வீடுகளில் மேல் கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேல்புறம் உள்ள இரும்புகள் மின் விசிறி, டியூப்லைட் கழன்று கீழே விழும். எனவே கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் கூரை வீடுகளில் வசிப்பவர்கள் தண்ணீரை வைத்து கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். காஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும். இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

fifteen + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi