ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தாக்கியதில் அரசு தங்கும் விடுதி செக்யூரிட்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ராமேஸ்வரம் புது ரோடு நம்பு கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர்(40). விடுதியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடலாடி மேலச்செல்வனூர் கோவிந்தன்(45) தனது ஆட்டோவை விடுதியின் முன்பு நிறுத்தியுள்ளார்.
அப்போது சேகர் ஆட்டோவை தங்கும் விடுதி முன்பு நிறுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கோவிந்தன் பிளேடால் தாக்கியுள்ளார். இதில் சேகரின் முகம், இடது கண் பகுதி, முதுகில் ரத்தக் காயம் ஏற்பட்டது. சேகரின் புகாரைத் தொடர்ந்து ராமேஸ்வரம் போலீசார் கோவிந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.