வருசநாடு, மே 28: வருசநாடு அருகே சூறைக்காற்று வீசியதால் பப்பாளி மரங்கள் சேதம் அடைந்துள்ளன. தேனி மாவட்டம் வருசநாடு அருகே பொன்னன் படுகை ஊராட்சிக்கு உட்பட்ட தெய்வேந்திரபுரம் கிராமத்தில் திடீரென சூறாவளி காற்று வீசியது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள பப்பாளி மரங்கள் சேதமடைந்தன. இதனால் சுமார் 2 ஏக்கருக்கும் மேல் பப்பாளி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தெய்வேந்திரபுரம் பகுதிகளில் கோடை காலத்தில் அதிகளவில் பப்பாளி விவசாயம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கோடை காலங்களில் அதிகளவில் மழை பெய்ததால் நீரூற்றுக்கள் அதிகரித்து மரங்களில் நீர்ச்சத்து அதிகரித்து உள்ளது. மேலும் சூறைக்காற்று வீச தொடங்கியதால் பப்பாளி மரங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். ஆகையால் தேனி மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்கி விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.