செய்யூர்: சூனாம்பேடு அருகே சாலை பணிக்காக வைக்கப்பட்ட தடுப்புகள் மீது கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில், போலீஸ் ஏட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது, நண்பர்கள் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் செல்வம் (35). புதுச்சேரியில் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவர் மற்றும் இவரது 3 நண்பர்கள் என 4 பேரும், காரில் சொந்த வேலை காரணமாக சென்றுவிட்டு, நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, மாலை 3 மணியளவில் சூனாம்பேடு அடுத்த வெண்ணாங்குப்பட்டு அருகே வந்தபோது, சாலை விரிவாக்க பணிக்காக சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது மோதி, அங்கு தோண்டி வைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூனாம்பேடு காவல் ஆய்வாளர் அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் பள்ளத்தில் கவிழ்ந்த காரை மீட்டனர். ஆனால், காரை ஓட்டிவந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரது நண்பர்கள் 3 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதனையடுத்து, போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.