ஊட்டி,அக்.7: சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா,படகு இல்லம்,ரோஜா பூங்கா மற்றும் தொட்டபெட்டா போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். குறிப்பாக, பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டி படகு இல்லத்திற்கு சென்று, அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்வது வழக்கம். விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து, அங்குள்ள மிதி படகுகள் மற்றும் மோட்டார் படகுகவளில் பயணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
தொடர் விடுமுறை நிறைவுக்கு வந்த நிலையில், பெரும்பாலான பள்ளிகள் காலாண்டு விடுமுறைக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. அனைத்து சுற்றுலா தலங்களும் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. குறிப்பாக, ஊட்டியில் உள்ள படகு இல்லம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல், தொட்டபெட்டா மற்றும் ரோஜா பூங்கா போன்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.