தர்மபுரி, ஆக. 10: தர்மபுரி அடுத்துள்ள பழைய தர்மபுரி அருகே, ராமாக்காள் ஏரி சுமார் 220 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியில் தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் கலக்கும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரி எப்போதும் பாசம் படிந்தே காணப்படும். ஏரியில் கழிவுநீர் கலப்பதால் ஏரிக்கரையை ஒட்டியபடி உள்ள வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில், கழிவுநீர் கலந்தே வருகிறது.
இதனால் கழிவுநீர் கலக்கும் இடத்தில், ஏரிக்கரையில் ரூ.25 லட்சம் மதிப்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையம் முறையாக பராமரிக்கப்படாததால், கழிவுநீர் தொடர்ந்து ஏரியில் கலந்து வருகிறது. இதனால் ஏரி கடும் துர்நாற்றம் வீசுவதால், ஏரியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.