சீர்காழி, மே 25: சீர்காழி திருவிக்ரமநாராயண பெருமாள் கோயில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் லோகநாயகி தாயாருடன் பெருமாள் காட்சி தருகிறார். கோயில் மூலவர் திருவிக்ரம நாராயணன் பெருமாள் தனது இடது காலை வான் நோக்கி தூக்கியவாறு காட்சி அளிக்கிறார். மூலவர் பெருமாளின் வலது பாதத்தை ஆண்டுக்கு ஒரு முறை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டுமே தரிசனம் செய்ய முடியும் . இத்தகைய புகழ்பெற்ற இக்கோயிலில்
வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் முக்கிய விழாவான தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போதுபெருமாள், தாயார் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். திருக்குளத்தில் தெப்பம் ஐந்து முறை வலம் வந்தது. பின்பு பெருமாள், தாயாருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.