சீர்காழி,ஜூன் 7: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்றன. இந்த பணியின் போது காந்தி பூங்காவில் நகராட்சி ஆணையர் வாசுதேவன் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிகள் தொடர்பாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்பு சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 25க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. மேலும் ஒளி பெருக்கி மூலம் பொதுமக்கள் குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை மற்றும் ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.