திருப்பூர், ஏப்.28: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி நகரை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (21). இவர் 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். கடந்த ஆண்டு உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து கோகுலகண்ணனை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக கோகுல கண்ணனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் அரசு சார்பில் வழங்கவும் பரிந்துரை செய்தார். இந்நிலையில் தற்போது சிறுமிக்கு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.