திண்டிவனம், மே 8: மயிலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கீழ் மயிலம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் பாலசுந்தரம்(36) என்பவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சிறுமியிடம் காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது பாலசுந்தரம் வீட்டின் உள்ளே நுழைந்து சிறுமியை கன்னத்தில் அடித்து, நீ என்னை காதலிக்கவில்லை
என்றால், கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் பாலசுந்தரனை கைது செய்த போலீசார் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.