சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, கடந்த மே 7ம் தேதி ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’ உருவாக்கப்பட்டது. அப்போது, மாநிலம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட 4.50 லட்சம் மனுக்கள் இத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்துறையால் 100 நாட்களில் அனைத்துத் துறைகளின் வாயிலாக மொத்தம் 4,57,645 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார். அப்போது, மனுக்களை கையாள்வதில் சிறப்பாகச் செயல்பட்ட மூன்று மாவட்டங்களுக்கு பாராட்டு சான்றிதழ், விருது வழங்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரமண சரஸ்வதி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார். மேலும், மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தொழில்நுட்ப ரீதியாக உதவிய சம்பந்தப்பட்ட செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. …