நிலக்கோட்டை, ஆக. 22: சின்னாளபட்டி அருகேயுள்ள அ.குரும்பபட்டி கிராமத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வீருநாகம்மாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் தாரை தப்பட்டை, வானவேடிக்கை முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாகசாலையில் வைத்து கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, இரண்டாம் காலபூஜை கோபூஜை, அக்னி ஹோமம், நாடி சந்தானம், மகா சாந்தி நடைபெற்றது.
நேற்று காலை ராஜகோபுர கலசத்திற்கும் மற்றும் ஸ்ரீவலம்புரி விநாயகர், ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ காசி விசாலாட்சி, பாலமுருகன், ஆஞ்சநேயர், துர்க்கை, காலபைரவர், தட்சிணா மூர்த்தி, நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.