திருமலை: சித்தூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற ஆம்புலன்சில் செம்மரம் கடத்திய தமிழகத்தை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் கிராமிய கிழக்கு காவல் நிலைய போலீசார் சித்தூர்-வேலூர் சாலையில் இன்ஸ்பெக்டர் பாலய்யா தலைமையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர்.அப்போது சந்தேகம்படும் வகையில் சித்தூரில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டுருந்த ஆம்புலன்சை நிறுத்தி சோதனை செய்தபோது ஆம்புலன்சில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த செம்மரம் கடத்தலுக்கு வந்த 8 கூலி தொழிலாளர்கள், 2 மேஸ்திரிகள் 1 டிரைவர் உள்பட 11 பேரை கைது செய்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள 36 செம்மரக் கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ரூ.15 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ், கோடாரி, அரிவாள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பலர் செம்மரக்கடத்தலில் ஈடுப்பட்டு சிறைக்கு சென்றுள்ளனர்.இதேபோல் சித்தூர் கிராமிய மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ் சென்னை-பெங்களூரு சாலையில் உள்ள குடிபாலா கிராஸில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சித்தூரில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் பின்னால் வரும் சரக்கு வாகனத்தில் செம்மரம் கடத்தி வருவதாக தெரிவித்தனர்.இதனையடுத்து நடத்திய சோதனையில் ரூ 50 லட்சம் மதிப்புள்ள 35 செம்மரக்கட்டைகள் கடத்தி வருவது தெரிய வந்தது. இதனையடுத்து நான்கு பேரை கைது செய்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள சரக்கு வேன்,பைக் பறிமுதல் செய்தனர். இதில் திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரை சேர்ந்த சிவாஜி 25, ஜி.காசி 37, ஆர்.தேவராஜ் 37, ராதாகிருஷ்ணா 37, டி.செல்வம் 21, குப்புசாமி30 , வி. பிரசாந்த் 26, சி.ஜெயபால் 23, கே. உதய் குமார் 26, சத்யராஜ் 25, பாக்யராஜ் 24, ஆகியோர் முதல் வழக்கிலும், இரண்டாவது வழக்கில் சென்னை மிண்ட் பகுதியை சேர்ந்த லட்சுமிபதி 53, திருவள்ளூரை சேர்ந்த டி. சாமுவேல் 26 ரெட்ஹில்ஸ் சேர்ந்த டி.பிரவீன் குமார் 29, திருத்தணியை சேர்ந்த ஆர். முத்துராஜ் @ அண்ணாச்சி, 53 ஆகிய 4 பேர் உள்பட 15 பேரை கைது செய்ததாக சித்தூர் மாவட்ட எஸ்.பி. ரிஷாந்த் ரெட்டி தெரிவித்தார்….