திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் பிரமோற்சவ விழாவில் காலை மற்றும் மாலை நேரங்களில் தேர்வீதி உலா நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோயிலில் சித்தரை மாத பிரமோற்சவ விழா கடந்த, 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.மேலும், தினமும் அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று காலை 9.30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பல்லக்கு சேவையிலும், இரவு, 7 மணிக்கு வெள்ளி நாக வாகனத்திலும் உற்சவர் எழுந்தருளி தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலையில் அன்னவாகனத்திலும், இரவு வெள்ளிமயில் வாகனத்திலும், நாளை(30ம் தேதி) காலையில் புலி வாகனத்திலும், இரவு, யானை வாகனத்திலும், மே 1ம் தேதி இரவு திருத்தேரிலும் உற்சவர் முருகப்பெருமான் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வரும், மே 2ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.