சிதம்பரத்தில் திடீர் பரபரப்பு நடுரோட்டில் எரிந்து சாம்பலான ஆம்னி வேன்

 

சிதம்பரம், ஜூலை 24: சிதம்பரத்தில் சாலையில் சென்ற ஆம்னி வேன், திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் ஓபி மெயின் ரோடு வழியாக நேற்று காலை ஆம்னி வேன் சென்றது. எதிர்பாராதவிதமாக வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே டிரைவர் வேனில் இருந்து இறங்கி உயிர் தப்பினார். தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. சம்பவ இடத்திற்கு அண்ணாமலை நகர் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதில் எரிந்துபோன ஆம்னி வேன் சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடியைச் சேர்ந்த வைத்தியநாதசுவாமி என்பவருக்கு சொந்தமானது. டூவீலர் மெக்கானிக்கான அவர் தனது பழைய ஆம்னி வேனை சீரமைத்து நேற்று காலை பரிசோதனை ஓட்டமாக ஓட்டுவதற்காக கோபாலகிருஷ்ணன் (38) என்பவரிடம் அளித்துள்ளார். அவர் காரை ஓட்டிச்சென்றபோது காரில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. கார் தீப்பிடித்ததும் காரை விட்டு இறங்கி ஓடியபோது, கோபாலகிருஷ்ணனுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஆடி திருவிழாவில் பாரி ஊர்வலம்

முழுமையான பணமில்லா சிகிச்சை ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்