ஆண்டிபட்டி: தேனி-மதுரை சாலையில் கிராமங்கள் அமைந்துள்ள சந்திப்பில் மின்விளக்குகளும், அறிவிப்பு பலகைகளும் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் நுழைவு பகுதியில் அமைந்துள்ள ஆண்டிபட்டி பகுதி வளர்ந்து வரும் நகராக உள்ளது. ஆண்டிபட்டி-தேனி தேசிய நெடுஞ்சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் எளிதாக பயணம் செய்து வருகின்றனர். ஆண்டிபட்டி-தேனி சாலையில் சண்முகசுந்தரபுரம், ரெங்கநாதபுரம், முத்தனம்பட்டி, பிராதுகாரன்பட்டி, க.விலக்கு, பிஸ்மி நகர், அரப்படிதேவன்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆனால், கிராமங்களுக்கு செல்லும் அறிவிப்பு பலகைகள் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். புதிதாக சாலையில் பயணிப்பவர்கள் கிராமங்களுக்கு செல்லும் பாதை தெரியாமல் தவிக்கின்றனர். மேலும் கிராம சந்திப்புகளில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, தேனி-மதுரை நெடுஞ்சாலையில், ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை உள்ள கிராம சந்திப்புகளில் மின்கோபுர விளக்குகளும், கிராமத்திற்கு செல்லும் அறிவிப்பு பலகைகளும் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்….