சென்னை: திருமுல்லைவாயல், மூர்த்தி நகர், நாகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஹரிஷ்சங்கர் (25). இவர், நேற்று தனது தாயார் அன்பழகியுடன் 40 சவரன் தங்க நகைகளை பையில் எடுத்துக் கொண்டு, ஜாக்நகரில் அக்கா வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அக்கா வீட்டில் பைக்கை நிறுத்திவிட்டு, அதில் மாட்டி இருந்த நகை பையை எடுக்க முயன்றபோது, மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் பழனி மற்றும் போலீசார், ஹரிஷ்சங்கர் பைக்கில் வந்த பாதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில், திருமுல்லைவாயல் ஜாக் நகர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது பையின் கைப்பிடி அறுந்து சாலையில் விழுந்தது. அதை பார்த்த ஒரு போதை ஆசாமி எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது. போலீசார் அந்த போதை ஆசாமியின் வீட்டை தேடி கண்டுபிடித்து சுமார் 2 மணி நேரத்தில் 40 சவரன் நகைகளை மீட்டனர். பின்னர், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அந்த நகைகளை உரியவரிடம் ஒப்படைத்தார். ஆவடி காவல் துணை ஆணையர் ஜெ.மகேஷ், மற்றும் உதவி ஆணையர் புருஷோத்தமன், திருமுல்லைவாயல் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பழனி, நகைகளை மீட்ட போலீசாரை பாராட்டினர்….