உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி 21வது வார்டு பகுதியில் தற்போது அதிக அளவு குடியிருப்பு வீடுகள் கட்டி பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் சாலையின் நடுவே மின்சார கம்பம் போடப்பட்டு உள்ளதால், இந்த சாலையில் செல்வதற்கு பொதுமக்கள் இரவு மற்றும் பகல் நேரத்தில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இந்த சாலையில் லாரி, டிராக்டர் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே உள்ள மின்சார கம்பத்தை வேறு இடத்தில் வைத்திட வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்….