காந்திநகர்: குஜராத்தில் 2வது நாளாக பிரதமர் மோடி நடத்திய வாகனப் பேரணியில் ஏராளமான மக்கள் திரண்டு மலர் தூவி வரவேற்றனர். நடந்து முடிந்த உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் 4ல் பாஜ தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரசாரத்தை உடனடியாக தொடங்கி உள்ளது. இதற்காக, குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி அகமதாபாத்தில் நேற்று வாகன பேரணி நடத்தினார். இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து, 2வது நாளான நேற்றும் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக ராஜ்பவனில் இருந்து காரில் புறப்பட்ட பிரதமர் மோடி 12 கிமீ தூரம் வாகன பேரணி நடத்தினார். தேகாம் பகுதிக்கு சென்றதும் அங்கிருந்து திறந்த ஜீப்பில் அவர் பேரணி சென்றார். அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் உடனடிருந்தனர். சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் திரண்டு மலர் தூவி பிரதமரை வரவேற்றனர். பின்னர் பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் பாதுகாப்பு துறையில் பல்வேறு தேவைகள் இருந்த போதிலும், எந்தவித சீர்த்திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. காவல் துறையிடமிருந்து விலகி இருப்பதே நல்லது என்ற சாமானிய மக்களின் எண்ணம் மாற வேண்டும்,’’ என்றார்.* மக்கள் அதிருப்தியால் தோல்வி பயம்குஜராத் மாநிலம், பாஜ.வின் அசைக்க முடியாத கோட்டையாக திகழ்கிறது. கடந்த 1998ம் ஆண்டிலிருந்து தற்போது வரை பாஜ ஆட்சியே நீடிக்கிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாக இருக்கும் குஜராத்தில் தற்போது பாஜ ஆட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி அலை வீசுகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு எதிர்க்கட்சிகளும் குஜராத்தை குறிவைக்கின்றன. இதனால், பிரதமர் மோடியே நேரடியாக களமிறங்கி, முன்கூட்டியே பிரசாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது….