பண்ருட்டி, செப். 17: பண்ருட்டி அருகே காடாம்புலியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி- கும்பகோணம் சாலை காடாம்புலியூரில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் சராசரியாக 50 பத்திரப் பதிவுகள் நடைபெறுகிறது. இதில் முறைகேடு நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு ரகசிய புகார் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை 5 மணியளவில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் குழுவினர், அங்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக, சார் பதிவாளர் மற்றும் அங்கிருந்த ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தற்காலிக பணியாளர்கள் எனும் பெயரில் அங்கிருந்த சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை ஏதேனும் நடந்திருக்கிறதா? எனவும் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 9 மணி வரை நீடித்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.