சாயல்குடி, செப்.19: சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் கோயில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடந்தது. இதில் காளைகள் முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர். சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி கிராமத்தில் உமையநாயகி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா கடந்த வாரம் செவ்வாய் கிழமை காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மதுக்குடம், பால்குடம், அக்னிசட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திருவிழாவையொட்டி நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து 14 காளைகள் கலந்து கொண்டது. 50க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.சாயல்குடி பகுதியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பார்வையாளர்கள் வந்து பார்த்து ரசித்தனர். காளை முட்டியதில் 5க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் சிறு காயமடைந்தனர்.