சாத்தூர், ஆக.30: சாத்தூர், படந்தால், அமீர்பாளையம், மேட்டமலை பகுதிகளில் தெரு நாய்களின் நடமாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. அதிகாலை நேரத்திலேயே நாய்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் உலா வரத் தொடங்குகிறது. நடைப்பயிற்சி செல்வோர், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பணிகளுக்கு செல்வோரை நாய்கள் சுற்றி வளைத்து குரைப்பதோடு கடிக்கவும் முற்படுகிறது. இதனால் அவர்கள் அச்சத்துடன் ஓட வேண்டி உள்ளது. இதனை தவிர்க்க நடைப்பயிற்சி மேற்கொள்வோர் கைகளில் தடியுடன் நடக்க வேண்டி உள்ளது.
பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது உணவு பைகளை கீழே போட்டுவிட்டு அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைகின்றனர். இரவு நேரங்களில் தனியாக தெருக்களில் நடந்து வருவோரை இந்த நாய்களின் கூட்டம் குரைத்துக் கொண்டே துரத்துவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் பலர் அச்சமடைந்து குரல் எழுப்பியபடி அங்கும் எங்கும் ஓடி தங்களை நாய்க்கடிகளில் இருந்து காத்துக் கொள்கின்றனர். இது போன்ற இடையூறுகளை போக்க நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.