சாத்தூர், ஜூலை 25: சாத்தூர் இருக்கன்குடி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் புகையால் திணறி வருகின்றனர். சாத்தூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு சாத்தூர் நென்மேனி சாலையில் உள்ளது. அங்கு சாத்தூர் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து வைத்துள்ளனர். அதுபோக எதற்கும் பயன்படுத்த முடியாத குப்பைகளை அப்பகுதியில் கொட்டி சேகரித்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் இப்பகுதிக்கு செல்லும் சிலர் குப்பையில் தீ வைத்துவிடுகின்றனர். இதில் அதிகளவு புகை உருவாகி சாத்தூர் இருக்கன்குடி சாலையே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் திணறி வருகின்றனர். எனவே சமூக விரோதிகள் குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.