மாமல்லபுரம்: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒன்றிய இளைஞர் நலன், விளையாட்டு மேம்பட்டு துறை செயலாளர் சுஜாதா சதுர்வேதி நேற்று ஆய்வு செய்தார். மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. இதில், 188 நாடுகளை சேர்ந்த 350 அணிகளில், 2,500க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர். இந்த நிலையில், போட்டி நடக்க உள்ள ரிசார்ட்டில் பழைய அரங்கம், புதிய அரங்கம், வாகன நிறுத்துமிடம், செஸ் போர்டு, டேபிள் அமைக்கும், உள்ளிட்ட பல்வேறு பணிகளை அரசு மூலம் நியமிக்கப்பட்ட கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர், சிறப்பு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, அறிக்கை தயார் செய்து முதல்வர் ஸ்டாலினுக்கு அளித்து வருகின்றனர். இந்நிலையில், போட்டி நடக்க உள்ள தனியார் ரிசார்ட்டில் புதிய அரங்கம் அமைக்கும் பணி, வாகன நிறுத்தம், வீரர்கள் உணவு சாப்பிடும் கூடம், செஸ் போர்டு மற்றும் செஸ் டேபிள் அமைக்கும் பணி ஆகியற்றை ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் சுஜாதா சதுர்வேதி நேற்று அந்த ரிசார்ட்டுக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமை நிர்வாக அலுவலர் சங்கர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆகியோர் கொண்ட குழுவினருடன், பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்….