சென்னை: சர்வதேச சதுரங்க சாம்பியன்ஷிப்-2022 போட்டிக்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில் பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு மற்றும் இந்திய சதுரங்க கூட்டமைப்பு நிர்வாக அலுவலகத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று திறந்து வைத்தார். மேலும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை போட்டிகள் நடைபெறும் என்றும் கூறினார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தங்கும் விடுதியில் 44-வது சர்வதேச சதுரங்க சாம்பியன்ஷிப்-2022 போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு, மற்றும் இந்திய சதுரங்க கூட்டமைப்பு நிர்வாக அலுவலகத்தை நேற்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர் ஆனந்தகுமார், இந்திய சதுரங்க கூட்டமைப்பு செயலாளர் மற்றும் ஒலிம்பியாட் இயக்குநர் பாரத்சிங் சவுகான், உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மெய்யநாதன் அளித்த பேட்டி: 44வது சர்வதேச சதுரங்க சாம்பியன்ஷிப் -2022 போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 2022 ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் ஏறத்தாழ 186- நாடுகளிலிருந்து 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் உத்தரவின்படி, இந்த போட்டியை சிறப்பாக நடத்திட தமிழ்நாடு அரசு செயலாளர் தலைமையில் சென்னை சதுரங்க ஒலிம்பியாட் கமிட்டி என்ற சிறப்பு சங்கம் உருவாக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அரசின் சார்பில் முன்னேற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்காக சிறப்பு அலுவலராக டாக்டர் தரேஸ் அகமது நியமிக்கப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு மற்றும் இந்திய சதுரங்க கூட்டமைப்பு நிர்வாக அலுவலகம் மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தங்கும் விடுதி முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் இன்று (நேற்று) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்….