நாமக்கல், பிப்.23: நாமக்கல்லில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்சென்ற 15 டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்து ஆர்டிஓ நடவடிக்கை எடுத்தார். நாமக்கல் மாவட்டத்தில், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்செல்லும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர், நேற்று நாமக்கல் – திருச்சி ரோட்டில் திடீர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.அப்போது அவ்வழியாக சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்சென்ற 15 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டது. மேலும், சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டதுடன், 15 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமமும், தற்காலிகமாக ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்செல்லும் ஓடடுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ தெரிவித்தார்.