சென்னை: சரக்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் தங்களின் சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றி வாகனங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் மற்றும் வாகனத்தின் அனுமதிச் சீட்டினை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: சரக்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் தங்களின் சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றி வாகனங்களை இயக்குவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் அதிக பாரம் ஏற்றியதற்கு ரூ.20,000மும், கூடுதலாக வாகனத்தில் ஏற்றப்படும் ஒவ்வொரு டன்னிற்கும் ரூ.2000 வீதம் அபராதம் வசூலிக்கப்படும். இத்துடன் கூடுதலாக ஏற்றப்பட்டுள்ள சரக்குகளை இறக்கி வைக்கப்படும் செலவு தொகையையும் வாகன உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படுவதுடன் வாகனத்தின் அனுமதிச் சீட்டினை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும். இதனை மீறுவோரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்றும் மற்றும் 1984-ம் வருடத்திய பொது சொத்து பாதிப்பு தடுப்புச் சட்டத்தின்படி அதிகபட்சமாக 5 வருட சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்க நேரிடும் என்று எச்சரிக்கப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …