சென்னை: சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (35). டிரைவரான இவருக்கு மனைவி ரிப்கா மற்றும் குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் சூளைமேடு மேற்கு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்த நந்தகோபால் (48) என்பவரிடம் மினி வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நந்தகோபால் டிரைவர் சுரேசுக்கு சரிவர சம்பளம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடும்பம் நடத்த முடியாத சுரேஷ் தனது வேன் உரிமையாளர் நந்ததேகாபால் மீது புகார் அளிக்க சூளைமேடு காவல் நிலையத்திற்கு ேநற்று முன்தினம் இரவு வந்துள்ளார். அப்போது மது போதையில் இருந்ததால், காவல் நிலையத்தில் இருந்த போலீசார் நாளை வந்து புகார் அளிக்கும்படி கூறி அனுப்பியதாக கூறுப்படுகிறது. ஆனால் போதையில் டிரைவர் சுரேஷ், குடும்பம் நடத்த கையில் பணம் இல்லை. எனது சம்பள பணத்தை வாங்கி கொடுத்தால் தான் நான் இங்கிருந்து செல்வேன், என்று கூறி தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் போலீசார் சுரேஷை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அப்போது சுரேஷ் பையில் வைத்திருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி, தீ வைத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத பயிற்சி உதவி ஆய்வாளர் பச்சையப்பன், முதல் நிலை காவலர் பிரகாஷ், காவலர் பபின் ஆகியோர் தீப்பிடித்து வலி தாங்க முடியாமல் அங்கும் இங்கும் காவல் நிலையத்திற்குள் ஓடிய சுரேஷ் மீது துணியை போர்த்தி தீயை அணைத்தனர். பிறகு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சுரேஷை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 50 விழுக்காடு தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சம்பளம் கொடுக்காத மினி வேன் உரிமையாளர் நந்தகோபாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் அளிக்க வந்த டிரைவர் ஒருவர் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….