பந்தலூர், ஆக.28: பந்தலூர் அருகே சப்பந்தோடு, குழிவயல் பழங்குடியினர் மக்களுக்கு அரசு வீடு கட்டித்தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம்,சேரம்பாடி அருகே சப்பந்தோடு குழிவயல் பகுதியில் பகுதியில் ஏராளமான பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு முறையான வீடுகள் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில் அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வீடுகள் இல்லாத பழங்குடியினர் மக்களுக்கு அரசு மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு சிலருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்காததால் கூரைகளுக்கு பிளாஸ்டிக் போட்டு குடிசை வீடுகளில் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மழைக்காலங்களில் வீடுகள் முழுதும் மழைநீர் புகுந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து முறையாக வீடுகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியினர் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.