திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் அருகே மாளிகைப்புரத்தில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 3 தொழிலாளிகள் காயமடைந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வெடி வழிபாடு நடத்துவது உண்டு. ஒரு வெடிக்கு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. கேரளாவில் பெரும்பாலான கோயில்களிலும் இந்த வெடி வழிபாடு நடைபெறுவது உண்டு. இதற்கு குறைந்த திறன் கொண்ட வெடி பொருள்தான் பயன்படுத்தப்படும். சபரிமலையில் மாளிகைப்புரம் கோயில் அருகே பக்தர்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்துத் தான் வெடி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை வெடி பொருள் நிரப்பும் பணியில் வழக்கம்போல தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் தீப்பிடித்து வெடித்தது. இதில் வெடிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த ஜெயக்குமார் (47), அமல் (28) மற்றும் ராஜேஷ் (35) ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு சன்னிதானம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெடிபொருளில் எப்படி தீ பிடித்தது என்று தெரியவில்லை. இது குறித்து சன்னிதானம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று சபரிமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….