நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சன் பவுண்டேஷன் மூலம் ரூ.2.24 கோடி மதிப்பில் அரசுப் பள்ளிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பயனாளர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த பள்ளி மற்றும் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புனரமைப்புப் பணிகள், புதிய வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காக சன் பவுண்டேஷன் 2 கோடியே 24 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தது. வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் மூலம் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கலைஞர் படித்த திருக்குவளை பள்ளிக் கட்டிடம் புனரமைப்பு, ஸ்மார்ட் வகுப்பறைகள், முத்துவேலர் அஞ்சுகம் தாய்சேய் நல விடுதி, கலைஞர் நூலக மேம்பாடு ஆகிய பணிகள் நிறைவேற்றப்பட்டு, அவை பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. சன் பவுண்டேஷன் சார்பில் மல்லிகா மாறன், செல்வி செல்வம், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் அவற்றைத் திறந்து வைத்தனர். முன்னதாக, திருவாரூர் அடுத்த காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் நூலகத்தை மல்லிகா மாறன் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கூரைக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த காட்டூர் அரசுப் பள்ளி, கலைஞர் அளித்த நிதி உதவியால் 1957-ம் ஆண்டு ஓட்டுக் கட்டிடமாக மாறியது.65 ஆண்டுகள் பழமையான அந்தக் கட்டிடங்கள் சிதிலமடைந்திருந்த நிலையில், சன் பவுண்டேஷன் நிதி உதவி மூலம் பழமை மாறாமல் அக்கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஏழை எளியோருக்கு கல்வி, அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல், தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக சன் டிவியும் சன் பவுண்டேஷனும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன. இத்திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. இணைந்து இதுவரை 160 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது….