தஞ்சாவூர், ஆக. 25: சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று முன்தினம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதை கொண்டாடும் வகையில் தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு இலவச பேருந்து பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .
சந்திரயான் 3ஐ குறிக்கும் வகையில் 3 இடங்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம், மாரியம்மன் கோவில், நாஞ்சிக்கோட்டை ஆகிய இடங்களுக்கு இரவு 9 மணி வரை மொத்தம் 26 முறை இந்த இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் பயணிகளுக்கு இனிப்பும், தேசியக்கொடியும் வழங்கப்பட்டது.
சந்திராயன் 3 வெற்றியுடன் கூடுதல் கொண்டாட்டமாக இலவச பேருந்து பயணமும் கிடைத்ததையடுத்து தஞ்சாவூர் நகர பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் தலைமையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.