விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரிமலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் வரும் 30ம் தேதி வரை, 6 நாள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷம், பௌர்ணமி மற்றும் அமாவாசை முன்னிட்டு 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மாதந்தோறும் பக்தர்கள் மலை ஏறி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அந்த வகையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி கோவிலில் பொதுமக்கள் மலையேறுவதற்கான நேரம் காலை 5 மணி முதல் 3 மணி என மாற்றம் செய்யப்பட்டது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசை திருவிழாவை ஒட்டி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் அடிவார பாதை வழியாக மலையேறி சாமி தரிசனம் செய்யலாம் என்றும், இரவு நேரங்களில் கோவிலிலும், வனப்பகுதியிலும் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை என்றும் வனத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது….