புதுச்சேரி, நவ. 16: கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதுபெரும் சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உழைக்கும் மக்களின் தோழராக வாழ்ந்த சங்கரய்யா இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் மூத்த தலைவர்களோடு பயணித்தவர். கல்லூரி பருவத்திலிருந்தே பொது வாழ்க்கைக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்குவதற்கு முக்கிய பங்காற்றியவர். கம்யூனிஸ்ட் பேரியக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு. அவரை பிரிந்து வாழும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.