சகிப்புதன்மையின்மையை வீட்டுக்கு வெளியே காலணிகளை போல் விட்டு செல்ல வேண்டும்: குழந்தையை கேட்டு தாய் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கருத்து

சென்னை: அகம்பாவத்தையும், சகிப்புத்தன்மையின்மையும் காலணிகளைப் போல
வீட்டுக்கு வெளியே விட்டுச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தம்பதியின்
வாழ்க்கை பாதிப்பது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் மன உளைச்சல் ஏற்படும்
என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்
நீதிமன்றத்தில், கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தனது நான்கு வயது
குழந்தையை கடத்திச் சென்று கணவர் சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதால்,
குழந்தையை மீட்டுத்தர உத்தரவிட வேண்டும் எனக் கோரி ஆட்கொணர்வு மனுவை
தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன்
மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, கணவனை பிரியும்
முன் மனுதாரர் தனது குழந்தையை வேண்டுமென்றே கணவரிடம் விட்டுச்
சென்றுள்ளார் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை
விசாரித்த நீதிபதிகள், கடந்த 2020ம் ஆண்டு முதல் தந்தையிடம் குழந்தை
வளர்ந்து வரும் நிலையில் அதை சட்டவிரோத காவலில் இருப்பதாக கருத முடியாது
எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மேலும்,
அகம்பாவமும், அன்பும் ஒரு சேர பயணிக்க முடியாது. அகம்பாவம் உறவை கெடுத்து
விடும். அகம்பாவம், சகிப்பு தன்மையின்மையை காலணிகளாக கருதி வீட்டுக்கு
வெளியில் விட்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தம்பதியருக்கு
மட்டுமல்லாமல், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். மனைவி என்பவர்
குடும்பத்தின் ஆணிவேர் போன்றவர். கணவர் அடிமரம். மற்ற உறுப்பினர்கள்
கிளைகள்.  வேர் சேதமடைந்து விட்டால் மொத்த குடும்பமும் பாதிப்படையும்
என்பதால்  கணவன்-மனைவி தங்கள் குழந்தைகளின் நலனை கருதி அகம்பாவங்களை
விட்டொழிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை