கோவை, ஜூன் 3: மக்களவை பொதுத்தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, மாவட்டத்தில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியற் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழையும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கிரேன் வாகனம் ஒன்று வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போது, நுழைவு வாயில் பகுதியில் இருந்த கேட் மீது கிரேன் மோதியதில் கேட் சேதமடைந்தது. இதையடுத்து, சேதமடைந்த கேட் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று கேட் சரிசெய்யப்பட்டது. மேலும், வாக்கு எண்ணும் பணி நாளை நடக்கும் நிலையில், நுழைவு வாயில் கேட் சேதமடைந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.