கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஓய்வுப்பெற்ற பதிவாளர் துணைவேந்தர் அறையில் வைத்து பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணியாற்றிய முருகன் என்பவர் கடந்த 30ம் தேதி ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வு பெற்ற அன்றே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறையில் இருந்துக்கொண்டே பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பதிவாளர் முருகன் பாரதிய ஜனதாவில் சுயவிருப்பத்தின் அடிப்படையில் சேர்ந்ததாக அக்கட்சியினர் புதிய விளக்கம் அளித்துள்ளனர். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அன்றே அரசியல் கட்சியில் இணைந்தது மட்டுமின்றி துணைவேந்தர் அறையில் அரசியல் நிகழ்வை நடத்தியிருப்பது சட்டவிரோதம் என்று பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் உயர்கல்வியில் பாரதிய ஜனதா கட்சியின் ஆதிக்கம் இருப்பதாக எழுந்த விமர்சனத்தை இதுபோன்ற நிகழ்வுகள் மெய்ப்பிப்பதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். …