கோவை, செப்.13: கோவை ஜெம் மருத்துவமனை பியூஜிபிலிம் இந்தியா எனும் நிறுவனத்துடன் கைகோர்த்து இரைப்பை குடல் பகுதிகளில் ஏற்படக்கூடிய புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் அதிநவீன ‘கெட் ஐ ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ்’ எனும் கருவியை தமிழகத்தில் முதல் முறையாக நேற்று அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தை ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு அறிமுகம் செய்து வைத்தார்.
இது குறித்து ஜெம் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் பழனிவேலு கூறியதாவது: ஜெம் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தி இருக்கக்கூடிய கெட் ஐ ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் எனும் சாதனம் மிகவும் பயனுள்ளதாக அமையும். ஒருவரின் உடலில் கட்டி என்பது பெருங்குடல் பகுதியில் இருந்தாலும் வயிற்று பகுதியில் இருந்தாலும், அதை ஆய்வு செய்கையில், இந்தகெட் ஐ ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் சாதனம் அதி நவீன செயற்கை நுண்ணறிவு தகவல்களை வழங்கி அந்தக் கட்டிகளின் தன்மை என்னவென்று மிக தெளிவாக வெளிப்படுத்தும்.
நோய்களைக் கண்டறிய முன்னெடுக்கப்படும் ஆய்வுகளை மிகவும் துல்லியமாக, விரைவாக செய்ய இந்த சாதனம் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதில், ஜெம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரவீன்ராஜ், தலைமை அதிகாரி டாக்டர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.