கோவை, ஜூலை 25: கோவை-சத்தி சாலை விரிவாக்கம் செய்ய விவசாய நிலங்களை கையகப்படுத்த முயல்வதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அன்னூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: கோவை குரும்பம்பாளையம் முதல் சத்தியமங்கலம் வரை சுமார் 30 கிலோ மீட்டருக்கு சாலை விரிவாக்கம் செய்ய பணிகள் துவங்க உள்ளன. இந்த சாலை விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சி நடக்கிறது.
சத்தி சாலையை ஏற்கனவே 5 அடிக்கு அகலப்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இதுவே போதுமானது. ஆனால் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி நடக்கிறது. இதனால் தென்னை, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலம் வீணாகும். எனவே விவசாய நிலங்களை கையப்படுத்தும் முயற்சியை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.