கோவை கார் வெடிப்பு சம்பவம் என்ஐஏ விசாரிக்க மு.க.ஸ்டாலின் பரிந்துரை: சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் முடிவு; சிறப்பு படை உருவாக்கவும் உத்தரவு

சென்னை: கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். கோவையில் கடந்த 23ம் தேதி அதிகாலையில் கார் வெடித்து சிதறியது. காரில் இருந்த ஜமேசா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து 75 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருக்கு உதவியதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கோவை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் பணீந்திரரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, முதல்வரின் செயலாளர்கள் உதயசந்திரன், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட் சன் தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை, உக்கடம் பகுதியில் கடந்த 23ம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் விரிவான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில், கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.  இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திடவும் முதல்வர் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டு தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், * கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திட வேண்டும்.* மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல் துறையில் ஒரு சிறப்பு படையை உருவாக்க வேண்டும்.* கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய  முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்பு கேமராக்களை விரைவில் பொருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.* மாநிலத்தின் உளவு பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலர்களை நியமனம் செய்யலாம்.* இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களை பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும், அவர்களை ஊக்குவித்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளதால், மத்திய அரசும் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே என்ஐஏ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டுள்ளதால், அவர்கள் தொடர்ந்து விசாரணையை மேற்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.* கோவை மாநகர் பாதுகாப்பை வலுப்படுத்த கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.* தமிழகத்தில் முக்கிய நகரங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும்.* உளவு பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலர்களை நியமனம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.* மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுக்க சிறப்பு படை உருவாக்கப்படும்….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு