நெல்லை : சென்னை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களை வேகமாக இயக்கிடும் வகையில் கோவில்பட்டி – கடம்பூர் ரயில் நிலையங்களுக்கிடையே 11.50 கிமீ தூரம் உள்ள ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கோவில்பட்டி – கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையிலான ஒரு வழி ரயில்பாதை 1993ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ரயில் பாதை 52 கிலோ கிராம் தண்டவாளங்களாலும், 60 கிலோகிராம் எடையுள்ள ஸ்லிப்பர்களாலும் அமைக்கப்பட்டது. இப்பகுதி கரிசல் மண் பகுதியாக காணப்பட்டது. இதனால் இந்த ரயில் பாதையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கப்படும் சரக்கு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களை இயக்கிட வேகம் பெரும் பிரச்னையாக இருந்தது. மேலும் கோடை மற்றும் குளிர் காலங்களில் தண்டவாளங்களில் விரிசல் ஏற்படுதல் போன்ற சிக்கல்கள் நிலவின. ரயில் பாதைகளை பராமரிப்பதில் சில இடர்பாடுகளும் இருந்து வந்தன. மதுரை – வாஞ்சி மணியாச்சி பிரிவில் ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டாலும், கோவில்பட்டி – கடம்பூர் இடையே கரிசல் மண் தொய்வு காரணமாக 70 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்களை இயக்க முடிந்தது.ஸ்லிப்பர் கனத்தை அதிகரிப்பது, நவீன கருவிகள் பொருத்துவது, ரயில் பாதை சரளைக் கற்களை சலித்து நிர்மாணிப்பது, ரயில் பாதை ஓரங்களில் மழை வடிகால் அமைப்பது போன்ற தற்காலிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் கரிசல் மண் தொய்வை சரி செய்ய முடியவில்லை. எனவே இப்பகுதியில் தொடர்ந்து ரயில்களை 70 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க முடிந்தது. தற்போது அந்தப் பகுதியில் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு மீட்டர் ஆழம் தோண்டப்பட்டு அதில் செம்மண் நிரப்பப்பட்டு நிலம் பலப்படுத்தப்பட்டு வருகிறது.பலப்படுத்தப்பட்ட நிலத்தின் மேல் நவீன புதிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்த பணிகளுக்காக ரூபாய் 21.74 கோடி செலவிடப்படுகிறது. பணிகள் முடிந்தவுடன் இந்தப் பகுதியிலும் ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது….