கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி, மறவர் காலனியை சேர்ந்தவர் குருவம்மாள் (67). லிங்கம்பட்டியில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து தனியாக வசித்து வருகிறார். அவரது வலது காலில் அடிக்கடி வலி ஏற்பட்டதால் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மார்ச் 22ம் தேதி சேர்ந்தார். அங்கு அவருக்கு கடந்த 4ம் தேதி டாக்டர் சீனிவாசன் தலைமையிலான டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் வலி ஏற்பட்ட வலது காலுக்கு பதிலாக எந்த வலியும் இல்லாத இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சை முடிந்து மயக்க நிலையில் இருந்த குருவம்மாளை பெண்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றி உள்ளனர். மயக்கம் தெளிந்த பிறகுதான் கால் மாற்றி அறுவை சிகிச்சை செய்துள்ளதை, மூதாட்டி உணர்ந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட டாக்டர் சீனிவாசனிடம் கேட்ட போது, இடது காலில் கட்டி இருந்தது, அதனால் ஆபரேஷன் செய்தோம் என்று கூறியுள்ளார். தகவலறிந்து தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் முருகேவேல், விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து மூதாட்டிக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் சீனிவாசன், ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மூதாட்டிக்கு வலது காலில், முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது….