சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஏஐஎஸ்எப் மாணவர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்கள் சங்க மாவட்ட தலைவர் சசிகுமார் பேசியதாவது: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் அம்மா ஓடி திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு துரோகங்கள் செய்து வருகிறார். அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வருடத்திற்கு ₹20,000 முதல் 30 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது ஆனால் இவர் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தற்போது அம்மா ஓடி திட்டத்தின் கீழ் அனைத்து மாணவ மாணவிகளுக்கு 13,000 வழங்கி வருகிறார். இதனால் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாண மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மிகவும் குறைந்த அளவு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். தற்போது ஆந்திர மாநில முதல்வர் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடுநிலைப் பள்ளியில் படிக்க வேண்டும் என மாற்றம் செய்துள்ளார். அதேபோல் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்க மாற்றம் செய்துள்ளார். அதேபோல் அரசு உயர் நிலையில் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பழைய நிலையிலேயே அனைத்து பள்ளிகளை செயல்பட மாநில அரசு உத்தரவிட வேண்டும். மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் காலணிகள் உள்ளிட்டவை இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, மாநில முதல்வர் ஜெகன்மோகன் வெளியிட்ட அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசு ஆரம்பப்பள்ளி நடுநிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளை அந்தந்த பள்ளியில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஏஐஎஸ்எப் மாணவர்கள் சங்கம் சார்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….