மதுரை, செப். 24: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில், மதுரை மாவட்ட ஏழு உட்கோட்ட அலுவலகங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மற்றும் வடக்கு உட்கோட்ட அலுவலகங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில பொருளாளர் தமிழ், உட்கோட்ட தலைவர் முருகன், துணை தலைவர் சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் ஆபத்துபடி மற்றும் நிர்ணயப்படி, சீருடை சலவைப்படி ஆகியவற்றுக்காக 10 சதவீதம் வழங்க வேண்டும். 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். பணிநீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர்நீத்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிபப்டையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.